Friday, September 24, 2010

ச‌த்சித் ஆன‌ந்த‌ம்

ந‌கைச்சுவை சிறுக‌தை‍

அந்த மே மாதத்தில், சென்னை சென்ட்ரலில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்து நிற்க, மூன்றாம் வகுப்பு குளிர் சாத‌ன‌ப் பெட்டியிலிருந்த்து தன் எடையைவிட மூன்று மடங்கு அதிகமுள்ள் பெட்டியுடன் நடைமேடையில் புன்னகை தவழ இறங்கினார் ஸோவோ சந்நியாசியும், டெல்லியில் உயிரியல் ஆசிரியராக வேலை பார்க்கும் நாற்பது வயது நந்திகேசன் என்னும் தியானத்தாமரை (சந்நியாசப் பெயர்). வ‌ழுக்கை த‌லை. ப‌ரும‌னான‌ உட‌ல்.க‌ழுத்தில் ஸோவோ ப‌ட‌ம் போட்ட‌ க‌ட்டை மாலை. ஸோவோ ஆசிரமத்தில் அணியக்கூடிய, கழுத்து முதல் பாதம் வரை தொங்கும் மஞ்சள் நிற நீள அங்கி அணிந்திருந்தார். பள்ளி செல்லும் சமயங்களில் வேண்டாவெறுப்பாக அஞ்ஞானிகள் அணியும் பேண்டுசட்டை. இளித்த வாய் சுருங்கவில்லை. பெட்டிதூக்குபவன் கூட அவர் முன் நிற்கவில்லை. புன்னகை வழிந்தபடியே இருந்தது. அப்புன்னகை யாருக்காகவும் இல்லை. அது அவரது இயல்பு. எப்பொழுதும் தன்னில் நின்று சத்சித் ஆனந்ததில் மிதப்பவர்.


சத்தமாய் காற்றைப் பிரித்து விட்டு மேலும் வாய்கிழிய சிரித்தவாறு சென்ட்ரலில் இருந்து வெளியேறிக்கொண்டிருந்தவரை வழிமறித்து, கைகூப்பி "வாழ்க வளமுடன்" என்றான் பாபு. தாமரையிடம் (இனி அவரை அப்படியே விளிப்போம்) புன்னகை தீவிரமடைந்த்து ஒரு பரவச நிலை முகத்தில் பரவ, இடது கை பெட்டியை தாங்க, வலது கையால் சின்முத்திரை தரித்து, தன் வலபக்க மார்பின் முலைக்கு கீழ் இரண்டு விரல்கட்டையும், மார்பின் நடுப்பகுதியில் இருந்து வலப்பக்கம் இரண்டு விரல்கட்டையும் சேரும் இடத்தில், அதாகப்பட்டது ரமணமகரிஷி தன் "சாதனை சாரத்தில்" குறிப்பிட்டுள்ள சூட்சம இதயத்தை தொட்டு, "வா.....ழ்ழ்ழ்க வளமுடன்" என்றார். பின் தன்னிரு பெரும் பிருஷ்ட்டங்களுக்கு இடையே மாட்டி நைந்துகொண்டிருக்கும் ஜட்டியை வெளியே இழுத்துவிட்டபடி "எப்படி இருக்கீங்க" என்றார். அவரை கண்ட சந்தோச முகத்துடன் "எல்லாம் சரியாகவே நடக்கின்றன" என்றான் பாபு.

தாமரையின் சித்தப்பா பையன். தன்னால் இயலாத காரியங்கள் வருகிற போதெல்லாம் ஆன்மிகத்தை தன் ஆயுதமாக்கி தன் பெற்றோரை வென்று வருபவன். அவனுடைய நண்பர்களுக்கும், காதலிகளுக்கும் இது உபயோகப்படுத்தப்படும். "டெல்லில வெயிலெல்லாம் எப்படியிருக்கு?" என்றான். தாமரை தன் பரவசம் களைந்தபடி "இப்போதான் ஆரம்பிச்சிருக்கு, போக போக கூடும் என்றார். இருவரும் ஆட்டோ பிடித்தனர். வரும் வழியெல்லாம் தான் செய்யும் தியானத்தை பற்றியும், அதில் அவன் அடைந்த அனுபவங்களை பற்றியும் ரமணரின் புத்தக வார்த்தை மாறாமல் சொல்லியபடி வர, தாமரை மெல்லிய புன்னகையுடன் அதை கேட்டவாரும், சில இடங்களில் "இந்த இடத்தில் விடாம இன்னும் கொஞ்சம் உள்ளே போய் பாரு" என் அறிவுறுத்தியும் இருக்க‌ வீடு வந்த‌து. வீடு வேளசேரி தாண்டி பள்ளிகரணை.

வீட்டில் பாபுவின் அப்பாவும், அம்மாவும் இருந்தனர். தாமரை வீட்டில் நுழைய, அவர்தம் அங்கியை கண்ட, திராவிட இயக்கத்தின் ஆரம்ப காலத்திலிருந்த்து பங்காற்றி கொண்டிருக்கும் பாபுவின் அப்பா , இதை ஜீரணிக்க முடியாமல் "வாடா" என்ற ஒற்றை சொல்லில் தன் அறைக்குள் நுழைந்து கொண்டார். தாமரையின் இப்போதைய புன்னகையில் வெற்றி இருந்தது. பாபுவின் அப்பா கோபத்தில் புகழ் பெற்றவர். அவரிடம் அடி வாங்காத சொந்தங்களே இல்லை. கடைசியாக டெல்லி செல்லும் முன் ஏதோ பேசப்போய் அவரிடம் பொளேர் என அடி வாங்கிய அனுபவம் தாமரையின் நினைவில் ஆடியது. பாபுவின் அம்மா ஒருவித கிலியுடனே அவரை வரவேற்றார். எப்படிப்பா இருக்க என்ற அவரின் கேள்விக்கு தாமரை மந்தகாசப் புன்னகை ஒன்றை பதிலாக்கியது அவரை மேலும் கிலியாக்கியது. இரண்டு ஆன்மிக செல்வங்களை அவர் பரிதாபகரமாக நோக்கியபடி இருக்க, தன் அறைக்கு பாபு அவரை கூட்டிச்சென்றான்.

கதவை தாழிட்டதும் தாமரை தன் அங்கியை களைத்து விட்டு ஜட்டியுடன், தன் பெட்டியிலிருந்து சிகரெட் பாக்கெட்டையும், தீப்பெட்டியையும் எடுத்துக்கொண்டு கழிவறை சென்றார். பாபு வீட்டிற்குள் சிகரெட் பிடிப்பதில்லை. கழிவறையில் அவர் வெடித்த குசு சத்தம், ஓம் என்ற பிரணவ மந்திரம் போலல்லாம‌ல், பாபுவை அறையை விட்டும் வெளியே அனுப்பியது. பின் தாமரை காபி குடித்துவிட்டும், குளிக்க போகும் போதும், காலை உணவிற்க்கு முன்னும், பின்னும் பலமுறை மலத்தையும், காற்றையும் கழித்து விட்டு, படுத்ததும் குறட்டைவிட்டார். பாபு அவரின் வயிற்றை பார்த்தபடி அருகில் அமர்ந்திருந்தான்.

பாபுவிற்கு தாமரையால் இரண்டு வேலைகள் டெல்லியிலிருந்தே அளிக்கப்பட்டிருந்தன. திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் மூன்று நாள் தங்க அனுமதியும், தங்களது சொந்த ஊரான உப்புக்கோட்டையில் தற்சமயம் பிரபலமாயிருக்கும் தாமரையின் முன்னாள் நண்பரும், பாபுவின் சத்குருவுமான சுவாமி ஸ்ரீதவகுருவை சந்ததிப்பதற்க்கும் ஏற்பாடு செய்யும்படி. அவர் தாந்திரிக முறைபடி தவம் செய்து காளியை அடைந்து, பின் சதாசிவ பிரம்மேந்திரரின் அருளால் ஞானம் அடைந்தவராக கருதப்படுகிறவர். அவர்பால் பாபு ஈர்க்கப்பட்டு அவரிடம் ஞான உபதேசமும், தியானமும் பெற்று தந்தையின் செருப்படியையும் மீறி முன்னேறி வருவதாக தன் சொந்தங்கள் மத்தியில் பேசப்படுகிறான்.

ரமணாசிரமத்தில் தாமரைக்கும் பாபுவிற்க்கும் அனுமதி அளித்து அறை ஒதுக்கப்பட்டிருந்த்தது. பாபுவின் நண்பனும், கனிப்பொறி வல்லுனருமான பாண்டியன் உடன் வர, தாமரையும், பாபுவும் திருவண்ணமலை புகுந்தனர். வந்திறங்கியது முதலே பரவசப்பாவையாக மாறிவிட்டார் தியானத்தாமரை. பாபுவிற்க்கு அவர் ஒரு ஆச்சரியமாகவே தெரிந்தார், மூடாத மேவாயும், கீவாயும் அவனை குழப்பத்தில் ஆழ்த்தின. ஆசிரமத்தின் அறைக்கு வந்ததும் வழக்கம் போல் சிகரெட்டை எடுத்துக்கொண்டு ஜட்டியுடன் கழிவறைக்கு போகமுற்பட, பாண்டியன் அவசரமாக கழிவறையை அபகரித்தான். முதன்முதலாக தாமரயின் இளித்த வாய் சட்டெனெ மூடிக்கொண்டதை பாபு கண்டான். உள்ளே சென்ற பாண்டியன், வெளியே வருவதற்கான அறியும், குறியும் இல்லாமை கண்டு தாமரை பொறுமையிழந்தபடி காத்திருந்த்தார். ஒருவாறாக பாண்டியன் வெளியே வர, மீண்டும் தாம‌ரை புன்னகையுடன் உள்ளே செல்லும் போது, பாண்டியன் போட்ட படாரென்ற குசுவால், அதிர்ந்து அடங்கியது அவரது புன்னகை.

திருவண்ணாமலையில் எப்பொழுதும் தியானத்தன்மையுடன் காட்சியளித்தார் தாமரை. அவரால் சம்மனம் போட்டு அதிக நேரம் உட்கார முடிந்தது. இது பாபுவிற்கு மிகவும் பொறாமையாக இருந்தது. கால் மணி நேரம் உட்கார்ந்தாலே கால் சூகை பிடித்து மரத்து போயிற்று அவனுக்கு. பின் வலிக்க ஆரம்பித்துவிடும். ஒரு அரைமணி நேரம் உட்கார்ந்தாலெ போதும் என முயற்ச்சித்தவனுக்கு தோல்வியே கிட்டியது. இருப்பினும் தாமரை போலவே பரவசம் காட்ட கற்றுக்கொண்டான்.

மூன்றாம் நாள் மலையில் உள்ள ஸ்கந்தாசிரமத்தை, வழியில் உட்கார்ந்து உட்கார்ந்து மூச்சிரைக்க நான்கு மணி நேர பயணத்தில் அடைந்தனர். அதற்கு காரணமான புகை பழக்கத்தை விரைவில் விட்டுவிட வேண்டுமென சொல்லிக்கொண்டனர். பின் தென்னைமரத்தடியில் ஒரு மணி நேர இளைப்பாறுதலுக்குப் பின் தியானம் செய்யத் தலைப்பட்டனர். பாண்டியன் மரத்தடியிலேயே தூங்கிவிட்டான். அவன் அஞ்ஞானத்தை கண்டு புன்னகை செய்துவிட்டு தியானிக்க அமர்ந்த‌னர். வழக்கம் போல் பாபு முக்கி முயன்று உட்கார‌ முடியாமல் மரத்தடிக்கு திரும்பினான்.

அங்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருத்தி, பாபுவை மேல் நோக்கிய அரைக்கண்களும், நிமிர்ந்த நெஞ்சுமாய் அமர்த்தினாள். அவள் தியான‌ அறைக்கு உள்ளே சென்றுவிட்டு அவன் பக்கத்தில் வந்து அவனிடம் எதோ சொல்ல, மிக மெதுவாய் கண்களை நேராக்கி, மிக மிக மெதுவாய் அவள் பக்கம் தலை திருப்பி என்ன என்பது போல் பார்த்தான். அவள் ஏதோ சொல்ல அவனுக்கு பகீரென்றது. அவள் பேசியது ஒன்றும் புரியவில்லை. ஆங்கிலமா அல்லது வேறு ஏதேனும் மொழியா என புரியாது விழித்தான். அவள் மறுபடியும் ஏதோ சொல்ல, இவன் விழிக்க, தூங்கிக்கொண்டிருந்த பாண்டியன் கண்விழித்து குணாவிடம், "மஞ்ச ட்ரெஸ் போட்ருக்காரே அவரு என்ன சந்நியாசினு கேக்குறா" என்றான். பாபு அதை கவனிக்காது போல அவளிடம், "ஸோவோ டிசிப்பில்" என்றேன். அவள் எதோ புரிந்துகொண்டவள் போல் தலையாட்டிவிட்டு போனாள். பெருத்த அவமானத்தை ஜீரனிக்க சின் முத்திரை தாங்கி கண்ணை மூடிக்கொண்டான்.

சிறிது நேரத்திற்கெல்லாம் தாமரை வெளிவந்தது பாபுவிற்கு ஆச்சரியமாய் இருந்தது. பரவசப்புன்னகையுடனே இருந்தார். பின் மெதுவாக "அவள் என்ன கேட்டாள்?" என்றார். பாபுவிற்கு தூக்கிவாரி போட்டது. எப்படி இவருக்கு தெரிந்தது? இவர் அமர்ந்திருந்த இடம் பாண்டியன் தூங்கிக்கொண்டிருக்கும் இடத்தை விட பக்கத்தில்தான் என்றாலும் ஆழ்ந்த தியானத்தில் அல்லவா இருந்தார். எப்படி? உடனே பாபுவிற்கு புரிய ஆரம்பித்துவிட்டது. யார் இவரை பற்றி கேட்டாலும், நினைத்தாலும் இவருடைய ஆழ்மனம் அதை அறிந்துகொள்ளும் அளவுக்கு ஆன்மிகத்தில் முன்னேறி இருக்கிறார் என்பது. பாபு பரவசத்துடன் அவள் கேட்டது பற்றி சொன்னான்.

தாம‌ரை பரவசமான புன்னகையுடன் "முகத்தில் தேஜஸ் தெரிவது இப்பொழுது எனக்கு ஒரு பிரச்சனையாய் இருக்கிறது. எனது தனிமைக்கு பங்கம் விளைவிக்கிறது என்றார். மேலும் அதற்கு ஒரு எ.கா(எடுத்துக்காட்டு) சொன்னார். "ஸோவோ மடத்திலே ஒரு அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்து தியானம் செய்ய வந்த வெளி நாட்டு பெண்ணொருத்தி தியானம் செய்யாது என்னையவே ஒரு மணி நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் ஏதும் அறியாது தியானம் முடித்து விட்டு நீச்சள்குளம் அருகே அமர்ந்திருக்கையில் என்னுடன் வந்து பேசினாள். ஆழ்நிலை தியானம் முடித்திருந்ததால் என்னால் வார்த்தைகளை உபயோகப்படுத்த முடியவில்லை. அவளை பார்த்து புன்னகைக்க மட்டுமே முடிந்தது. அதில் அவள் பரவசம் அடைந்தாள். பின் நான் அங்கே தங்கியிருந்த காலத்தில் என்னுடனே இருந்து சத்சங்கம் செய்து, தியானத்தின் அடுத்த நிலை அடைந்தாள் என்றார். இவர் த‌னக்கு அண்ணன் என்பதில் பாபு முதல் முறையாக பெருமையும் சந்தோசமும் அடைந்தான். விரைவில் இவர் த‌ன் குரு சுவாமி தவகுரு போல் வந்துவிடுவார் என்பதில் அவ‌னுக்கு எந்த ஐயமும் இல்லை.

த‌ங்களுடன் உப்புக்கொட்டைக்கு வருவதாக இருந்த அஞ்ஞானி பாண்டியன் மீண்டும் சென்னை திரும்பும் நோக்கம் பாபுவிற்கு சந்தோஷத்தையே அளித்தது. பற்பல ஆன்மிக சத்சங்கத்துடன் நானும் சுவாமி தாமரையும் உப்புக்கோட்டை வந்து சேர்ந்தார்க‌ள். சுவாமிக்கு அம்மா அப்பா இல்லை. தம்பி மிலிட்டிரியிலும், தங்கை திருமணம் செய்துகொண்டும் சென்றுவிட்டதால் நேராக சுவாமி தவகுரு ஆசிரமத்திற்க்கு சென்றார்க‌ள். ஆசிரமம் ஊருக்கு வெளியே அமைந்த்திருந்தது சுவாமி தவகுரு தற்சமயம் ஆசிரமத்தில் இல்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தன் இல்லற சீடர் ஒருவரின் கவனிப்பில் ஊருக்குள் சீடரின் வீட்டிலேயே இருந்த்தார். பாபு சுவாமி தவகுருவை பார்க்க செல்ல, சுவாமி தாமரை சொந்தங்களை பார்த்து விட்டு வருவதாக சொன்னார்.

பாபு சுவாமி தவகுருவின் வீட்டில் நுழையும் போது, அவர் கிளிக்கு பொரிகடலை போட்டவண்ணம் இருந்தார். கருத்த அஜானுபானுவான உடலில் காவி வேட்டி மட்டும் கட்டியிருந்தார். தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை. ஒருமாத தலை முடி அது. தாடியும். பொதுவாக அமாவாசைக்கு மொட்டையிட்டுக்கொள்ளும் பழக்கம் அவ‌ருக்கு. பாபுவை கண்டதும் "அட! எப்பப்பா வந்த? ஊருல ஏதும் இழவா? இல்ல கல்யாணமா? என்றார். பாபு பயபக்தியுடன் அவர் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தான். பின் "உங்கள பாக்கத்தான் வந்தேன் என்று சொல்லி, வாங்கிவந்த ஆப்பிளை கொடுத்தான். சில பல குசல விசாரிப்புகள் முடிந்தவுடன் பாபு "சுவாமி தியானத்தாமரை வந்திருக்கிறார்" என்றான். அவர் குழப்பமாக யார் என்றார்? "உங்க பழைய பிரெண்டு, நந்திகேசன்" என்றான். அவர் சிறிது யோசித்துவிட்டு ஓ அவனா...எப்போ வந்தாப்ல? என்றார். இன்னிக்கு காலைலதான். நானும் அவரும் திருவன்னாமலை போய்ட்டு வந்தோம் என்றான். நம்ம ஆசிரமத்திலதான் இருக்காரு. இங்கே வர்றேன்னு சொன்னாரு என்றான். சரி சரி என்று சொல்லிவிட்டு பின் திடுகிட்டு "நீ வேற ஏதோ சாமின்னு சொன்ன? என்றார்.

பாபு சுவாமி தியானத்தாமரையின் ஆன்மிக பிரதாபங்களை விளக்கி சொன்னான். சுவாமி ஒருவித பயபிராந்த்தியில் இருப்பதாகப்பட்டது அவ‌னது மாயையே. "அப்போ ஸோவோ மடத்திலேயே சந்நியாசம் வாங்கிட்டாப்லயா..." என்று சிந்தனையில் ஆழ்ந்தார். காலையிலிருந்து மாலை வ‌ரை தாம‌ரை ப‌ற்றியே பேசினான் பாபு. மாலை நேரத்தில் சுவாமி தியானத்தாமரையின் விஜயம் செய்தார். நீளமான மஞ்சள் அங்கியே பாமரரான தவகுருவை கலவரப்படுத்தியதாய் அவ‌ன் நினைத்தது மன்னிக்க முடியாத குரு துரோகம். மானசீகமாய் மன்னிப்பு கோரிவிட்டு சுவாமி தியானதாமரைக்கு வழிவிட்டு அமர்ந்தான். தாமரை ம‌ல‌ர் விரிந்து மலர்ந்ததைப்போல் தவகுருவைக் கண்டு காது வரை இளித்தபடி அமர்ந்தார் தியானத்தாமரை. கட்டிலில் இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் கஸ்டப்பட்டு அமர்ந்து சிரித்தபடி கைகூப்பினார் தவகுரு. "வா........ழ்க வளமுடன்" என தாமரை வணக்கம் வைக்க தவகுரு கிலியடைந்த்தாய் பாபு மனம் எண்ணியதை அவ‌னே கவனிக்கவில்லை. ஆத்யா சக்தியும், கிரியா சக்தியும் உரையாடப் போவதாய் உணர்ந்து முயற்ச்சிக்காமலேயே பரவசம் அடைந்தான்.

தாமரைதான் ஆன்மிக வரலாற்றில் இடம்பெறக்கூடிய அந்த சத்சங்கத்தை ஆரம்பித்தார். பாபு த‌ன் புத்தி, மனம், செயல், வாக்கு, உடல் இன்ன பிற அனைத்தையும் அவர்களிடையே குவித்தான். எப்படி இருக்கீங்க? என்று ஆரம்பித்தார் தாமரை. "ஙெ..நா.. நான் நல்லாயிருக்கேன்" என்ற தவகுரு பெரிதாய் ஒரு ஏப்பம் விட்டு பின் சொம்பில் தண்ணியை குடித்து விட்டு தன்னை தயார்படுத்தி கொள்வது போல் உடலை மீண்டும் சரி படுத்திவிட்டு, தொப்பையை முன்னுக்கு தள்ளி இயல்பாக தோற்றமளிக்க கூடியதாக பின் சாய்ந்து உட்கார்ந்தார். தாமரை ஒரு நாற்காலியில் நெஞ்சை நிமிர்த்தி புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். பாபு நாற்காலிக்கு அருகில் த‌ரையில் உட்கார்ந்திருந்தான்.

"நீங்க நல்லாயிருகீங்களா? டெல்லில உத்தியோகமெல்லாம் எப்படி போவுது? என்ற தவகுருவின் கேள்விக்கு தாமரை சிரிப்பை மட்டுமே தந்தார். சில வினாடிகள் மவுனத்திற்கு பின் தவகுரு "கல்யாணம் ஆயிடுச்சா? என்றார். இல்லை என தாமரை தலையாட்ட ஏன்? என்றார் தவகுரு. அதற்கும் பதிலாக கொஞ்சம் சத்தம் வரும்படியாக சிரித்த தாமரை தவகுருவிடம், பாபுவைக்காட்டி இவங்களுக்கெல்லாம் என்ன சொல்லி குடுக்குறீங்க என்றார். தவகுரு என்னை ஒரு மாதிரி பார்த்து விட்டு "ரமணரும் ராமகிருஷ்ணரும் சங்கரரும் ஏற்கனவே எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. இனி நான் என்னத்த புதுசா சொல்லப்போறேன். அவங்க சொன்னத இவங்களுக்கு அப்படியே சொல்றேன் அவ்வளவுதான் என்றார்.

உடனே தாமரை "அதில இன்னும் எசென்ஸ் இருக்குனு நினைக்கிறீங்களா?" என்றார். தவகுரு படபடப்பாகி "இல்ல நான் ஏசு பத்தி எதுவும் சொல்லிகிடறது இல்ல. நம்மூரு கோவில் தர்மகர்த்தாவும், பிஜேபி ஆளுகளும் அதெல்லாம் வேண்டாம் சாமின்னுட்டாக. மதமாற்றம் வேற நடக்குதில்லையா என்றார். தாமரை கொஞ்சம் குழம்பி போனார். அவரின் சத்தமற்ற குசு எனக்கு தன் வாசனையை காட்டியது. பின் உறுதியாக "இந்த கலியுகத்துக்கு ஏற்ப நம்மலோட தியானமுறைகளும் மாறனும். மனிதனோட மனம் இப்போ அதிதீவிர மாயைக்கு உட்பட்டிருக்கு. நம்மலோட தியான முறை அதுக்கு தகுந்த மாதிரி மாறினாதான் ஆன்மிகம் இன்னிக்கு அனுபவப்படும் என்றார்.

தவகுருவுக்கு வேர்க்கத்தொடங்கியது. பின் "இப்போ பிராணயாமம் செய்யின்னு யோகிகள் சொல்றாங்க. வலப்பக்கம் மூச்சிலுத்து இடப்பக்கம் விடுன்னு ஆரம்பிக்குது. இது ஒரு முறை. இத நாம அப்படியேதான செய்யனும்.. மாத்தி செஞ்சா கைகால் விளங்காம போயிராது? என்றார் தவகுரு. தாமரை "இது ஆரம்பம் மட்டும் தான். ஸோவோ இன்றைய உலகதுக்கு பல தியான முறைகள, பிராணயாமத்த கொடுத்திருக்காரு. உதாரணத்துக்கு அவரோட டைனமிக் பிராணயாமத்தில" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தபடியே இறுக்க கண்ணை மூடிக்கொண்டு அதிவிரைவாக உள்ளே வெளியே மூச்சுவிட ஆரம்பித்தார். மூக்குசளி தவகுருவின் மேல் தெரித்தது. ஒவ்வொரு முறையும் மூச்சிலுத்து விடும் போது இரு கைகளயும் அஸ்கு புஸ்கு காட்டுவது போல வேகமாய் ஆட்டினார். மோட்டார் துவங்க அடம்பிடிக்கும் சத்தம் கேட்டது. தவகுரு அரண்டு போனார். "ஏய் நிறுத்தப்பா நிறுத்தப்பா என அலறினார். தாமரையின் காதில் ஏதும் விழவில்லை. பாபுவிற்கு தாமரையின் உயிர் தெரித்து சிதறிவிடும் போல் தோன்றியது. பின் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினார். பரவசமான புன்னகையுடன் கண் திறந்தார். தவகுரு அரண்டு போய் உட்காந்திருந்தார். தாமரை "இதன் மூலம் நாம் நம் ஆற்றலை பெருக்க முடியும். நம் சுசுமுனா நாடி திறக்கும் என்றார். தவகுரு எதுவும் பெசவில்லை. பின் தாமரை பரவசம் குன்றாது மெல்ல எழுந்து மெதுவாக பாடியபடி தன்னை தானே சுற்ற ஆரம்பித்தார்.

"துமாரெ தர்சன் கீ பேலா
யமொசம் ராஸ்ட்ர சானேகா
லியே உல்லாசுகி சாசே
சமே மஸ்தீனே சானேகா
துமாரெ தர்சன் கீ பேலா...

அதையே திரும்ப திரும்ப பாடி ஒரு கட்டத்தில் பாட்டின் வேகத்தை கூட்டி கரகரவென சுத்த ஆரம்பித்தார். நிலை தடுமாறாது சுற்றிய அவரை கண்டு பயந்து எழுந்துவிட்டார் தவகுரு. பத்து நிமிட சுற்றலுக்கு பின் அடிபடாது லாவகமாய் கட்டிலில் விழுந்தார். தவகுரு திடுக்கிட்டு நாற்காலியில் விழுந்தார். தாமரையின் உடல் முழுதும் வேர்க்ககிடந்தார். தவகுரு ஒன்றும் புரியாது பாபுவை பார்க்க அவ‌ன் வாய்பிளந்து, கண் அகல உட்கார்ந்திருந்தான். சிறிது நேரத்தில் பரவச போதையில் எழுந்த தாமரை மந்தகாசப் புன்னகையுடன் தவகுருவை நோக்கி "இந்த தியானத்தால் நாம் நம் சக்கரங்களை உணரமுடியும்" என்றார். மேலும் "இதுதான் சைதன்யர், ராமகிருஸ்ணர் போன்றோர்களால் சொல்லபட்ட தியானத்தின் இன்றைய வடிவம். இதுல‌ மொத்தம் இருபத்தியாறு டைனமிக் இருக்கு" என்றார்.

தவகுரு தனக்கான ஒரு இடத்தை பிடித்துக்கொள்ளும் பொருட்டு "தந்திராவிலே.. என ஆரம்பித்தார். உடனே தாமரை "தந்திராவின் இன்றைய முறையை ஸோவோ ரொம்ப அருமையா தன்னோட டைனமிக்ல கொண்டு வந்திருக்கார். உதாரணமா.." என்று அங்கியை கழட்ட முற்பட தவகுரு தாவி அவரை பிடித்துக்கொண்டு "இங்க பொம்பளையாள் இருக்காக..என்றார் பயத்துடன். தாமரை "ஆண், பெண் பேதமேது? அவங்களும் இதை செய்யலாம்" என்றார். தவகுரு பரிதாபமாக விழித்தார். ஒருகணம் தன் தொப்பையை தடவியபடி யோசித்த தாமரை பின் புன்னகை தவழ அமர்ந்தார். "இன்றைய காலத்துக்கு ஏற்ப எல்லா விதமான தியான முறைகளும் இருக்கு. கலியுகத்துக்கு இதுதான் ஏத்தது" ஆடுவோம், பாடுவோம், ஆனந்தமாய் இருப்போம். நடக்க வேண்டியதை நாம் தீர்மானிக்க வேண்டாம். அது தன்னாலே நடக்கும் என்றார். தவகுருவும் ஆமோதித்தார்.

"நாம் சூர்ய நாடி, சந்திர நாடி என பார்த்து பார்த்து தியானம் செய்வது என்னை பொறுத்தவரை உப‌யோகமற்றது. ஞானம் உணர்ந்தவுடன் உடல் தன்னாலே அந்தந்த நாடிகளை அதற்கேற்ப சரிபடுத்திக்கொள்ளும். நாம் அதற்காக ஒன்றும் செய்ய தேவை இல்லை. என்றும் ஆனந்தமாய் இருப்போம், ஆடுவோம், பாடுவோம் என்றார் தாமரை. தவகுருவுக்கு தான் படித்த, கற்ற எதுவும் ஞாபகத்திற்கு வரவில்லை. இருட்ட தொடங்கியவுடன் பாபு எழுந்து விளக்கை போட்டான். தாமரையின் பரவசம் குறையவில்லை. தவகுரு தாமரையிடம் "நான் உங்க பின்னாடி ஒரு ஓளியை காண்கிறேன் என்றார். தாமரையின் வழுக்கையில் விழுந்த ஒளியென பாபு கருதவில்லை.

- அப‌ராஜித‌ன்

1 comment: